Saturday, August 22, 2009

அதிதியின் முத்தான மழலைகள்

# 1. அதிதிக்கு நான் ராமாயணம் கதை சொல்வதுண்டு. ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் பிறந்ததிலிருந்து ராமாயணத்தை ஆரம்பித்து, விஸ்வாமித்திரருடன் காட்டிற்குச் சென்று அஸுரர்களை அழித்தது, அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலைக்குச் சென்று, சிவ தனுஷை ஒடித்து ஸீதையை கல்யாணம் பண்ணிக்கொண்ட காட்சியை சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே, அதிதி தன் இனிய குரலில் பாடத்தொடங்கினாள் - “ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே..”

# 2. வழக்கம் போல அதிதிக்கு ராமாயணம் கதை சொல்லிக் கொண்டு இருந்தேன். ஸீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனதையும், ஜடாயுவைப் பற்றியும் சொன்னபிறகு, நான்பாட்டுக்கு என்னையும் அறியாமலேயே, “அப்றம், ராமர், லக்ஷ்மணன், ஸீதை மூணு பேரும் அங்கேயிருந்து கிளம்பினா ..” என்று சொல்ல, உடனே இடைமறித்த அதிதி, “தாத்தா, ஸீதையைத்தான் அந்த ராக்ஷசன் தூக்கிண்டு போயிட்டானே” என என்னைத் திருத்தினாள்.

# 3. அடுத்த நாள், ஹனுமான் ஸீதையைத் தேடிக்கொண்டு லங்கா போனதையும், எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து கடைசியில் ஸீதாதேவியை அஷோகவனத்தில் பார்த்ததை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். ஹனுமான் ஸீதையிடம், “நீங்கள் இங்கிருப்பதை நான் ஸ்ரீராமனிடம் போய் சொல்லுகிறேன்,” என்று சொன்னார் என சொன்னேன். உடனே அதிதி, “ஏன் தாத்தா, அவர்கிட்டே செல்ஃபோன் இல்லயா,ஃபோனிலேயே சொல்லிடலாமே” என்று கேட்டாள்!

குறிப்பு: அதிதியின் வயசு 3 முடிந்து 2 மாஸம்.

ராஜப்பா
22-8-2009 காலை 10:30 மணி


No comments:

Post a Comment