Thursday, August 05, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

போன வாரத்தில் ஒரு நாள் - ஸ்கூலிலிருந்து (ஹரிஸ்ரீ வித்யாலயா)   திரும்பிய அதிதி, “தாத்தா, ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேளு” என்று ஆரம்பித்து, குற்றால அருவி சாரலாக, பொங்கிப் பெருகி வரும் காவிரியாக, மடமடவென்று எதையோ சொல்லி முடித்தாள்.

அவள் முகத்தில் வழக்கம்போல பெருமிதமும், குறும்பும் கொப்பளித்தன.  எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. “காத்தால நீ படிப்பியே, அந்த கீதை, தாத்தா” என்று விளக்கம் கொடுத்தாள். கீதை புஸ்தகத்தை எடுத்து INDEX ஐ புரட்டினாலும் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை.

 “ஸூர்ய ஏவ மஹாபாஹோ ..” என்பது ஆரம்பம் எனப் புரிந்தாலும், “ஸூர்ய” என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் கீதையில் இல்லை.  எத்தனை முறை கேட்டாலும் அதிதி ஸூர்ய ஏவ என்றே ஆரம்பித்தாள்.

மறுநாள்தான் குழப்பம் நீங்கியது - அர்விந்த் ஸ்கூலிலிருந்து வந்ததும் “கீதையின் 10வது அத்தியாயம், முதல் 10 ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்” என சொன்னான்.

                भुय एव महाबाहो श्रूणु मे परमम वच: ।

           यत्त ते अहम प्री-यमाणाय वच्-स्यामि हित-काम्यया ॥

இது அத்தியாயம் 10 -- ஸ்லோகம் 1.

பூய ஏவ என்பதை ஸூர்ய ஏவ என மழலையில் மாற்றிவிட்டாள். இதுவரை முதல் 3 ஸ்லோகங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அதிதி தினமும் காலையில் என் பக்கத்தில் உட்கார்ந்து, “ஸூர்ய ஏவ” ஆரம்பித்து 3 ஸ்லோகங்களையும் மழலையில் சொல்லுவாள்.

கீதை அருளிய கிருஷ்ண பகவானே அந்த மழலையில் மனசை பறிகொடுத்து விடுவான் - பூய ஏவ == ஸூர்ய ஏவ என மாற்றப்பட்டால் என்ன !?

ராஜப்பா
05-08-2010
காலை 11.00 மணி


1 comment:

  1. பள்ளியில் கீதை சொல்லிக் கொடுப்பதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete